தன் மீது உருவாகியுள்ள டெம்ளேட்டுகளை உடைத்து, உலக அரசியல், இந்திய அரசியல் என வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி. கதைக்கான மையத்தை நெருங்கும் முதல் பாதியின் காட்சிகளிலிருக்கும் வேகம் சிறிது குழப்பத்தை உண்டாக்கினாலும் நம் கவனத்தைச் சிதறவிடாமல் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக நட்டியின் நக்கலான பேச்சும், பிரச்னைகளை அணுகும் விதமும் ரசிக்க வைக்கின்றன. ஒரு போரினைக் காட்டவேண்டும், அதற்குப் பின்னான உலகினைக் காட்டவேண்டும் என்கிற பிரமாண்ட டாஸ்கினைக் குறைவான பட்ஜெட்டில் சிறப்பாகச் செயல்படுத்தி இருக்கிறது படக்குழு. அதேபோல சாதி,மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்று மனிதம் பேசிய இடமும் சிறப்பு. படத்தில் பல இடங்களில் நாம் உடனடியாக ஒரு புது உலகுக்குச் செல்லத் தயாராகிறோம். ஆனால் இடையிடையே வரும் காதல் காட்சிகளில் அதற்குத் தேவையான அழுத்தம் மிஸ்ஸிங்.


அரசியல் நையாண்டியாக இலுமினாட்டி தியரியை கலாய்த்ததும், அடிப்படைவாதிகளைக் கோமாளியாக மாற்றியிருப்பதும் சிந்திக்க வைக்கும் ‘கலகல’. காட்சியாக விவரிக்க வேண்டிய பல விஷயங்கள் வாய்ஸ் ஓவரிலேயே நகர்வது மைனஸ். அதுவும் பல முக்கியமான சம்பவங்களைத் தலைப்புச் செய்திகள் வாசிப்பதைப் போன்று கடந்துபோயிருப்பது அக்காட்சிகளுக்குத் தேவையான ஆழத்தைத் தராமல் போயிருக்கிறது. நட்டி நடிப்பைத் தாண்டி வாய்ஸ் ஓவரிலும் டபுள் டியூட்டி பார்த்திருக்கிறார். சினிமா என்பது காட்சி ஊடகம் என்பதால் இதனைச் சற்றே குறைத்திருக்கலாம். மேலும் போரின் வலியின் உணர்த்தப் பயன்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாமல் பத்தோடு பதினொன்றாக நகர்வது மைனஸ். குறிப்பாக ஹீரோவின் நண்பர்கள், முக்கியமான பாத்திரங்களின் மரணங்களை அப்படியே கடந்து போகிறோம். ஒருவேளை இவ்வளவு பெரிய கதையை ஒரு வெப்சீரிஸாக எடுத்திருந்தால் தேவையான உணர்வுகள் கடத்தப்பட்டிருக்குமோ?! கிளைமாக்ஸ் காட்சியை நெருங்குவதற்காக வடிவமைப்பட்ட காட்சிகளின் நீளத்தையும் இன்னும் குறைத்திருக்கலாம்.