தென்னாப்பிரிக்கா அணி தொடரிலிருந்து வெளியேறியதால் இந்தப் போட்டி காலிறுதி போட்டியை போன்றே பரபரப்புடன் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்வதாகத் தீர்மானித்தது. சர்க்கார், நசூம் அகமது, எபடாட் ஹொசைன் என மூன்று மாற்றங்களைச் செய்திருந்தனர். லிட்டன் தாஸ் – ஷான்டோ இணை ஆட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். ஷதாப் கான் வீசிய 11வது ஓவரில் சர்க்கார் ரிவர்ஸ் ஸிவ்ப் ஆட முயன்று கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷகிப் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷான்டோ நிதானமாக ஆடி அரைசதம் கடந்து இப்திதார் பந்தில் போல்டானார். அடுத்து வந்த பேட்டர்களில் அபிப் ஹொசைன் மட்டும் தாக்குப்பிடித்து 24 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் இறுதியில் ஷாகின் ஷா அப்ரிடியின் வேகத்தில் வங்கதேசம் தடுமாறியது. ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷதாப் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்குத் தொடக்கத்திலேயே ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை கீப்பர் நுருல் ஹசன் தவறவிட்டார். மறுமுனையில் பாபர் அசாம் பந்துகளை டைம் செய்வதில் சிரமப்பட்டார். ஆனால், ரிஸ்வான் தவறவிட்ட வாய்ப்பை பயன்படுத்தி ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். ஷகிப் பந்துகளை ஸ்வீப் ஆடி அட்டாக் செய்தார். நசூம் அகமது பந்தில் தடுமாறிக் கொண்டிருந்த பாபர் அசாம் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரிஸ்வான் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரிஸ் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவர் 18 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.