கடந்த அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது: அமைச்சர் பி.மூர்த்தி அதிரடி

Share

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமி எத்தனை கோடி லஞ்சம் வாங்கினார் என்பதற்கு ஆதாரம் உள்ளது என மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரையில், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகன் திருமணத்தில் ஏழை, எளிய மக்கள் சாதி சமுதாயத்துக்கு அப்பாற்பட்டு அனைவரும் சமமாக உட்கார்ந்து உணவு சாப்பிட்டனர். ஒரு இலைக்கு அதிகப்பட்சம் ரூ.300 வருமா? 50,000 பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமா? ஒரு தகர ஷெட் போட்டு, துணியைக் கட்டி திருமணம் நடத்தப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆவதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்திருப்பார் என்பது தெரியும். அதிமுக ஆட்சியில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது மக்களுக்கு யார் 6 வேளை உணவு வழங்கியது? சாப்பாடு போட்டதை எல்லாம் அரசியலாக்கலாமா? அனைத்தையும் சொல்லிக்கொண்டே சென்றால் நாகரீகமாக இருக்காது. எடப்பாடி பழனிசாமி எத்தனை லட்சம் கோடி லஞ்சம் வாங்கினார் என்பதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. பத்திர பதிவுத்துறையில் தவறாக பதிவு செய்தவர் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் யாரையாவது கைது செய்துள்ளீர்களா? ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஏதாவது வருவாயை உயர்த்த முயற்சி செய்யப்பட்டதா? இவ்வாறு அவர் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com