கேள்வி: எனக்கு 33-வது வாரத்திலேயே குறைப்பிரசவம் ஆனது. பிறக்கும்போது, குழந்தையின் எடை 1.9 கிலோவாக இருந்தது. முதல் ஐந்து நாள்கள் தீவிர பச்சிளங்குழந்தைகள் பிரிவில் வைக்கப்பட்டிருந்த என் குழந்தையை தற்போது என்னிடம் கொடுத்து விட்டனர். குழந்தைக்குப் போதுமான அளவு கதகதப்பு கிடைத்தால்தான் எடை நன்றாகக் கூடும் என்று, கங்காரு மதர் கேர் செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். கங்காரு மதர் கேர் குழந்தைக்கு எப்படி உதவுகிறது, எத்தனை நாள்கள் வரை தொடர வேண்டும் என்று கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் டாக்டர்?
ஆஸ்திரேலியாவில் காணப்படும் கங்காரு, கரு உருவாகிய 28 முதல், 33 நாள்களிலிலேயே தனது குட்டியை ஈன்றுவிடும். கங்காரு குட்டி பிறக்கும்போது சில சென்டிமீட்டர் நீளமும், ரோமங்கள் மற்றும் கண்பார்வை இல்லாமலும் இருக்கும். குட்டியை தாய், தனது வயிற்றின் மீதுள்ள பையில் வைத்திருக்கும். தாயின் உடல் கதகதப்பு, குட்டியின் உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகிறது.
மேலும், எப்போதும் வயிற்றின் மீதே இருப்பதால், தேவைப்படும்போதெல்லாம் குட்டியால் பால் குடிக்க முடியும். வேகமாக வளரத் தொடங்கும் கங்காரு குட்டி, 190 நாள்களில், தாயின் வயிற்றின் மீதுள்ள பையிலிருந்து தலையை வெளியே நீட்டி வெளி உலகை பார்க்கத் தொடங்கும். 235 நாள்களில், பையிலிருந்து முற்றிலும் வெளியேறிவிடும். கங்காரு கருவாக தனது குட்டியை ஒரு மாதம் கர்ப்பப்பையில் சுமந்தது என்றால், பிறந்த பிறகு சுமார் 8 மாதங்கள் வயிற்றிலுள்ள பையில் சுமக்கிறது.