சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது என்றும்; இதற்கு ஒன்றிய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும்,’என்றார்.
இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி கோரும் தீர்மானத்தை அதிமுக, விசிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து பேசின.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: இலங்கையில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு விண்ணைத்தொடும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.அரசு கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை : முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தை காங்கிரஸ் வரவேற்கிறது.
எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்: சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை பாஜக ஆதரிக்கிறது.
விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் : தமிழ்நாடு உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கிறது. இலங்கை மக்களுக்கு ஒரு மாத சம்பளம் தர தயார்
இதைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.