ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சிக்கலில் ஆளுநரின் அதிகாரம் : ஆளுநரை 'அம்பலப்படுத்திய' உச்சநீதிமன்றம்!

Share

சென்னை : ஆளுநரை ‘அம்பலப்படுத்திய’ உச்சநீதிமன்றம்! என்ற தலைப்பில் முரசொலி முக்கியமான தலையங்கம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், ‘இந்திய நீதித்துறையின் அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமானது ஆளுநர் என்றால் யார் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் பிறகாவது புரிய வேண்டியவர்களுக்கு அது புரிய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவருக்கு கடந்த மாதம் பிணையில் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘அவரை விடுவிப்பது குறித்து விரைந்து முடிவெடுக்காததால் உச்ச நீதிமன்றமே அவரை விடுதலை செய்யத் தயாராக இருக்கிறது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் அவர்கள் குறிப்பிட்டார்கள். தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. ‘பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கான முடிவை தமிழ்நாடு அமைச்சரவை எடுத்து அதனை தீர்மானமாகப் போட்டு ஆளுநருக்கு அனுப்பி விட்டோம். அவர்தான் ஒப்புதல் தருவதற்கு தாமதம் செய்கிறார். அவர் அவ்வாறு தாமதம் செய்வது தவறானது’ என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வாதத்தை வைத்தார். இருந்தாலும் ஆளுநர் முடிவெடுக்காததால், தானே முன்வந்து பிணையில் வழங்கியது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் நடந்துள்ளது. ‘நீங்கள் முடிவுகளை எடுக்காமல் இருப்பதற்காக பேரறிவாளன் சிறையில் இருந்தாக வேண்டுமா?’ என்று நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினார்கள். 32 ஆண்டுகள் பேரறிவாளனை சிறையில் வைத்திருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது. இன்னொரு தெளிவையும் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. அதுதான் ஆளுநரின் அதிகாரம் ஆகும். அப்படி எதுவும் ஆளுநர்களுக்கு இல்லை என்பதுதான் உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பது ஆகும்! உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வானது ஆளுநர் பதவி என்பது எத்தகையது என்பதைச் சொல்லி விட்டது. தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு ஆளுநர் அனுமதி தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதை நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். ‘தானே முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறானது. இது இந்த நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரான மிக மோசமான முன்னுதாரணமாக அமைகிறது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள்.  ‘அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் குடியரசுத் தலைவரிடம் கருத்துக் கேட்பாரா ஆளுநர்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். ‘நீங்கள் முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவதற்காக, இடையில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். சி.பி.ஐ. விசாரித்த வழக்கு என்பதால் அவர்களது கருத்தைக் கேட்க வேண்டும் என்றார்கள். சி.பி.ஐ. தரப்பானது, ‘ஆளுநரே முடிவெடுக்கலாம்’ என்றது. எனவே, ஆளுநர் முடிவெடுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2020ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது. ஆனாலும் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் இருந்து வருகிறார்.  ‘குடியரசுத் தலைவரிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்பது அது அரசியல் சட்டம் தொடர்புடையதாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது குறித்து குடியரசுத் தலைவரிடம் கேட்கலாம். இந்த தீர்மானம் அரசியல் அமைப்பு சட்டம் தொடர்புடையது அல்ல. 161ஆவது விதிப்படி மாநில அரசின் தீர்மானம் இது. இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டியது மட்டும்தான் ஆளுநர் கடமை’ என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தெளிவுபடுத்தினார். ‘ஆளுநர் முடிவெடுக்க குடியரசுத் தலைவரின் அனுமதி தேவை” என்றார் ஒன்றிய அரசின் வழக்கறிஞர். ‘அதற்கு என்ன ஆதாரம்?’ என்று நீதிபதிகள் கேட்டுள்ளார்கள். ‘ஆளுநர் நிலைப்பாடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது. விடுதலை செய்யும் தீர்மானம் என்பது ஆளுநரின் முடிவு அல்ல, அது ஒரு அரசாங்கத்தின் முடிவு. அமைச்சரவையின் முடிவு. அந்த முடிவுக்கு எதிராக முடிவெடுக்க ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை” என்பதை ஆணித்தரமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள், என்று முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com