இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் சபை, 2014-ம் ஆண்டில் ஜூன் 21-ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இந்த நாளில், யோகாவின் பலன்கள் குறித்து இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர் யோ. தீபா பகிர்ந்தவை இங்கே…

“இயற்கையுடன் இயைந்து அதன் போக்கில் வாழ்வதே ஆரோக்கியமான வாழ்க்கை. அதற்கான பாதைதான் யோகா. ‘தன்னுள் எப்படி வாழ வேண்டும்’ என்கிற சாரத்தைப் பயிற்றுவிக்கும் அறிவியல்தான் யோகா. இந்த மருந்தில்லா சிகிச்சை முறை உடல், மனம், ஒழுக்கம், உணர்ச்சி நிலைகள், ஆன்மிகக் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. யோகா செய்வதால் தசைகள், எலும்புகள், செல்கள் என உடலின் மொத்த உறுப்புகளும் வலிமை பெறும்.
யோகாவும் மூட நம்பிக்கைகளும்!
யோகா குறித்து நிறைய மூடநம்பிக்கைகள் உலவுகின்றன. ‘குறிப்பிட்ட வயதினர்தான் யோகா செய்ய வேண்டும்’, ‘தொடர்ந்து யோகா செய்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். இவையெல்லாம் தவறான பரப்புரைகள். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது யோகா. ஆனால், 20-ம் நூற்றாண்டில்தான் யோகாவின் மருத்துவத்தன்மையும் அறிவியலும் வெளியுலகுக்குத் தெரியவந்தது; இதையடுத்து யோகா பிரபலமானது. யோக சிகிச்சையில் ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், பந்தா, முத்திரைகள், கிரியா யோகா உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள்.

யோகா செய்வதால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மனரீதியான ஆரோக்கியமும் கிடைக்கும். உடலில் ஆக்சிஜன் சக்தி அதிகரிக்கும். கழிவுகள் மிக எளிதாக வெளியேறும். குறிப்பாக, செல்களில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படும்.
இன்று நம் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இளம் தலைமுறையை மன அழுத்தம் பீடித்து வதைக்கிறது. மன அழுத்தத்தால் ஒற்றைத் தலைவலி, குடல் பாதையில் எரிச்சல், இதய பாதிப்பு, சர்க்கரைநோய், எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். யோகா செய்வதால், மன அழுத்தத்தைக் குறைக்கலாம்; அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கலாம்.
முழு ஆரோக்கியம் தரும் யோகா!
யோகா, நவீன மருத்துவச் சிகிச்சைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து யோகா செய்தால், பக்கவிளைவுகள் வெகுவாகக் குறையும். இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும் யோகா செய்யலாம். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்காக சிகிச்சை பெறுவோர் தொடர்ந்து இதைச் செய்தால், மருந்துகளின் அளவைக் குறைக்க முடியும். யோகா செய்பவர்களின் தசைகள் மென்மையடையும். முழு உடல் ஆரோக்கியம் கிடைக்கும்; மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
தொடர்ந்து யோகா செய்பவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். நரம்புகள் சிறப்பாக வேலை செய்யும். இதயம் நோக்கி ரத்தம் சீராகப் பாயவும், செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்படவும் யோகா உதவும்.

மது, புகைப்பழக்கங்களைக் கைவிட விரும்புபவர்கள் யோகா செய்யலாம். அவர்களது மூளையில் `டோபமைன்’ (Dopamine) என்ற ஹார்மோன் சுரந்து, போதைப் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்கும்.
ஒவ்வொரு நோயின் தன்மைக்கேற்ப இயற்கை மருத்துவ நிபுணர்கள் யோகாவை வகைப்படுத்தியிருக்கிறார்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, தகுந்த ஆசனங்களைச் செய்வதன் மூலம் யோகாவின் முழுப் பயனையும் பெறலாம்” என்றார்.