தற்போது தலைதூக்கி வரும் காற்று மாசுபாடும் நுரையீரல் பாதிப்பு பயத்தை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நூறு பேரில் நான்கு பேருக்கு காசநோய் இருக்கிறது. ஒருவருக்கு காசநோய் குணமானாலும், அதனால் நுரையீரலில் ஏற்பட்ட சேதம் சரியாகாது. இதுகூட ஒருவருக்கு COPD பாதிப்பை ஏற்படுத்தலாம்.
COPD-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், சளி போன்றவை இருந்துகொண்டே இருக்கும். இது நாள்பட அதிகரிக்கும். இடையில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சளி போன்றவை COPD-யை மோசமாகிவிடும். நிமோனியா போன்ற நோய் தாக்கும்போது நுரையீரல் செயலிழப்புகூட ஏற்படலாம். சிலர் எப்போதும் சளி இருக்கிறது என்று அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அப்படி இருப்பது மிகவும் தவறு. சளி, இருமல் என எது இருந்தாலும், சைனஸ், ஆஸ்துமா, COPD போன்ற ஏதாவது ஒரு பிரச்னையால்தான் வருகிறது. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்வது மிக மிக அவசியம்.
COPD நோயை PFT(Pulmonary function tests), CT ஸ்கேன் போன்ற சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம். ஒருவருடைய பாலினம், உயரம், மற்றும் வயதைப் பொறுத்து நுரையீரலின் வளர்ச்சி மற்றும் திறன் இருக்கிறதா என்ற சோதனை செய்யப்படும். இந்தச் சோதனையில் காற்று வெளியேற்றும் இடத்தில் அடைப்பு மற்றும் நுரையீரலின் திறன் குறைவாக இருந்தால், அது COPD என உறுதிசெய்யப்படும். COPD பொறுத்தவரை நுரையீரலின் வளர்ச்சி 65-85% குறையும்போது முதல் நிலை என்றும், 50-65% குறையும்போது இரண்டாம் நிலை என்றும்,35-50% குறையும்போது மூன்றாம் நிலை என்றும், 35% கீழ் குறையும்போது நான்காம் நிலை என்றும்கூறப்படுகிறது.