ஒற்றைப் பெற்றோராக மோகன லட்சுமியும், அவரின் பொறுப்புகள் புரிந்த மகளும் இடைப்பட்ட வருடங்களைக் கடந்து வந்தது, துன்பங்களும் தன்னம்பிக்கையும் கைகோர்த்த பயணம். அப்பா இறந்தபோது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமி, ஆண்களுக்கான வேலை எனப் பிரித்துக்கொடுக்க இனி தங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, கறிக்கடை முதல், வங்கி வேலைகள் வரை கற்றுக்கொண்டார். `ஆண் துணை இல்லைனு என் அம்மா எந்தச் செயலுக்கும் சோர்ந்துடாம எல்லாத்தையும் நானே பண்ணுவேன்’ என்று அந்த பதின் வயதுப்பெண், பேரிழப்பை எதிர்கொள்ளும் பலத்தையும் பக்குவத்தையும் பற்றிக் கொண்டார். `அப்பா இல்லைனு என் மகள் எந்தச் சூழ்நிலையிலும் நினைச்சுடக் கூடாது’ என மோகன லட்சுமி தந்தையாகவும் வாழத் தொடங்கினார். இப்படி, தங்கள் தேவைகளையெல்லாம் சமாளித்து, மகள் படிப்பை முடித்து, வேலையில் அமர்ந்து, இனி வாழ ஆரம்பித்துவிடலாம் என்ற ஆசை கொண்டிருந்தவர்களுக்கு, அடுத்த புயல். வலி இறக்கி சற்று நிமிர ஆரம்பித்த அவர்கள் முதுகுத்தண்டில் மீண்டும் அடி. தொடர்ந்தார் மோகன லட்சுமி.
“நாலு மாசமா கீமோ தெரபிதான் போயிக்கிட்டிருக்கு. சினைப்பையையும், கருப்பையையும் ஆபரேஷன் செஞ்சு நீக்கிடணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதுக்கப்புறம் இன்னும் ரெண்டு தடவை கீமோ கொடுக்கணுமாம். இதுவரைக்கும் கீமோவுக்கே இரண்டரை லட்சம் செலவாகிடுச்சு. ஆபரேஷனுக்கு நாலு முதல் அஞ்சு லட்சம் செலவாகலாம்னு சொல்லியிருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஷுரன்ஸ் எடுத்து வெச்சிருக்கேன். ஆனா, சமாளிக்க முடியலைங்க. ஒரு கீமோவுக்கு முப்பதாயிரம் செலவாச்சுன்னா, பனிரெண்டு ஆயிரம்தான் க்ளெய்ம் பண்ண முடியுது. ஆபரேஷனுக்கும் அறுவதுல இருந்து எழுவது ஆயிரம்தான் க்ளெய்ம் ஆகும்னு சொல்றாங்க.