எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு தலையாட்டும் நபரே தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும், உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை கேட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணை புதன் கிழமையும் தொடர்ந்தது. அப்போது தேர்தல் ஆணையர் பதவியை நிரப்ப எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நிலுவையில் உள்ள போது, அருண் கோயலை மத்திய அரசு எவ்வாறு அப்பதவியில் நியமித்தது என கேள்வி எழுப்பினர்.
முதல்நாள் விருப்ப ஓய்வு பெற்றவரை மறுநாள் அரசு தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது. ஒரு நாளில் அரசு எப்படி அனைத்தையும் விசாரித்து தேர்தல் ஆணையராக நியமிக்க முடியும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.
தேர்வு முறையில் பல சந்தேகங்கள் இருப்பதால் அந்த நியமன ஆவணத்தை நீதிமன்றம் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, இது வழக்குக்கு தொடர்புடைய விவகாரம் அல்ல என்பதால் ஆவணத்தை நீதிமன்றம் கேட்கக் கூடாது என்று கூறினார்.
எனினும் அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
”600 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு..” அறிக்கை தந்த காவல்துறை.. ஷாக்கான நீதிமன்றம்!
மேலும் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்தால், ஜனநாயக அமைப்பு முற்றிலுமாக முடக்கி விடாதா என்றும் நீதிபதிகள் வினவினர். தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கு முன்மாதிரி குழுவை அமைப்பது காலத்தின் கட்டாயம் என்றும் அமைச்சரவை மட்டுமே ஒப்புதல் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு தலையாட்டும் நபர்களே தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அரசியல் சாசன பிரிவு 324 படி, தேர்தல் ஆணையரை நியமிக்கும் முன்னர் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 72 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
பிரச்னை தீர காட்டுக்குள் உடலுறவு.. ஜோடி மீது பெவிகுயிக் பசையை ஊற்றி கொடூரமாக கொலை செய்த மந்திரவாதி!
செவ்வாய் கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, 1990 ஆம் ஆண்டு முதல் 96 வரையிலான காலக்கட்டத்தில் தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் போன்ற ஒருவரை தேர்தல் ஆணையராக நியமனம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் 2004- ஆம் ஆண்டு முதல் ஒரு தேர்தல் ஆணையர் கூட தனது 6 ஆண்டு கால பதவியை நிறைவு செய்ததில்லை என்றும் 10 ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 6 தேர்தல் ஆணையர்கள் இருந்ததாகவும், தேசிய ஜனநயாக கூட்டணியின் 8 ஆண்டு ஆட்சியில் 8 தேர்தல் ஆணையர்கள் பதவி வகித்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த வழக்கின் வாதங்கள் இன்றும் தொடர உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.