மதுரை: ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகிவிட்டது. இதனை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச்சட்ட குழுவினர் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், 11வது தொகுப்பில், இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒன்றிய அரசு அலுவலகங்களில் இனிமேல் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட அரசுத்துறைகள், கல்வி நிறுவனங்கள், பணி நியமனத்தேர்வுகள் எல்லாவற்றிலும் இனி இந்தி வழிதான். நீதிமன்றங்கள், அலுவல் நிகழ்ச்சி நிரல்களில், தூதரகங்களின் தகவல் தொடர்பில் எங்கும் எல்லாம் இந்திதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய அரசு அமைச்சர்கள் அரைகுறை உச்சரிப்பில், ‘வணக்கோம்’ மற்றும் குறள்கள் கூறியது எல்லாம் நமக்கு தந்த லாலிபாப் தான். மொழி உரிமை, மொழி பன்மைத்துவம் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தி திணிப்பின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு ஒன்றிய அரசு தயாராகிவிட்டது. இதனை ஒருபோதும் தமிழகம் அனுமதிக்காது’’ என தெரிவித்துள்ளார்.
எங்கும், எதிலும் இந்தி? தமிழகம் அனுமதிக்காது: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்
Share
