டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள நிலையில், போட்டியின் போது நேரத்தை மிச்சப்படுத்தவும், ஃபீல்டிங் கட்டுப்பாடு அபராதத்தை தவிர்க்கவும் ஒரு தனித்துவமான திட்டத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அமல்படுத்தியிருக்கிறது.
டி20 போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரத்தை பந்து வீசுவதற்காக அணிகள் எடுத்துக் கொள்வது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது. இது பலவிதங்களில் கிரிக்கெட்டுக்கு பின்னடைவாகவே அமைகிறது. இதைத் தவிர்க்க வேண்டி ஐசிசி ஸ்லோ ஓவர் ரேட் பெனால்டி விதிமுறையை கடந்த ஜனவரி முதல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, குறிப்பிட்ட நேரத்துக்குள் 20 ஓவர்களையும் ஒரு அணி வீசியாக வேண்டும். இல்லையேல் அந்த நேரத்திற்கு மேல் வீசப்படும் அத்தனை ஓவர்களின்போதும் 30 யார்டு வட்டத்திற்கு வெளியே ஒரு பீல்டரை குறைவாக நிறுத்தியாகவேண்டும். இது பந்துவீசும் அணிகளுக்கு டெத் ஓவர்களில் பெரும் பின்னடைவாக அமையும்.
A clever ploy from the Aussies who are keen to avoid the fielding restriction penalty if overs aren't bowled in time during this #T20WorldCup pic.twitter.com/5e73KABQcd
— cricket.com.au (@cricketcomau) October 19, 2022
ஐசிசி விதிகளின்படி, “வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.22 ன் படி அணிகள் அதிகப்படியாக வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.”
இவற்றை தவிர்க்கவே ஆஸ்திரேலிய அணி மதிநுட்பமான ஒரு வேலையை செய்திருக்கிறது. பவுண்டரி எல்லைகளுக்கு வெளியில் அடிக்கும் பந்துகளை விரைவாக திரும்பப் பெறவும், பவர் பிளேயின்போது பந்து வீசும் நேரத்தை மிச்சப்படுத்தவும், பெஞ்சில் இருக்கும் வீரர்களை பவுண்டரி எல்லையைச் சுற்றி நிறுத்தயிருக்கிறார்கள். இதன்மூலம் பவர்ப்ளேக்களில் பவுண்டரி செல்லும் பந்துக்களை 30 யார்டு வட்டத்திற்கு உள்ளிருந்து வீரர்கள் அத்தனை தூரம் ஓடி வந்து எடுக்க வேண்டிய தேவை எழாது. மொத்தத்தில் பென்ச்சில் இருக்கும் வீரர்களையும் பவுண்டரி எல்லைக்கு வெளியே எக்ஸ்ட்ரா பீல்டர்களாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி நேர விரயத்தை குறைக்க முயல்கிறது.
ஆஸ்திரேலியாவின் வியூகத்தை விளக்கிய ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகர், “பவர்பிளேயின் போது மைதானத்தைச் சுற்றி பெஞ்சில் இருக்கும் தோழர்களை நிறுத்துவது குறைந்தபட்சம் 10 விநாடிகளையாவது சேமிக்கும் என்று நினைக்கிறேன். இதனால் ஆட்டத்தின் வேகம் அதிகரித்து, நேரம் மிச்சமாகிறது. இது பெரும் நன்மையைத் தரும்.’ எனக் கூறியுள்ளார்.