
திடீரென ஏற்படும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுத்து, ஆற்றலை தக்க வைத்துக் கொள்ள ORS (Oral Rehydration Solution) எனப்படும் உப்பு – சர்க்கரை கரைசலானது கொடுக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 29-ம் தேதி உலக ஓ.ஆர்.எஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

ஓ.ஆர்.எஸ் கரைசல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதே இந்த தினத்தின் நோக்கம்.

வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றின்போது அதிகமான நீர் உடலில் இருந்து வெளியேறும். இதனால் உண்டாகும் நீரிழப்பை தடுக்க ஓ.ஆர்.எஸ் கரைசல் கைக்கொடுக்கும்.

யாரெல்லாம் ஓ.ஆர்.எஸ் குடிக்கக் கூடாது: ஓ.ஆர்.எஸ் கரைசலில் உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இந்த குடிநீர் கரைசலை குடிப்பதை தவிர்க்கலாம்.

ஓ.ஆர்.எஸ் கரைசல் சிறுநீரகத்தை பாதிக்கலாம். எனவே சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் ஓ.ஆர்.எஸ் பருகுவதை தவிர்க்கலாம்.

ரத்த அழுத்தத்திற்காக (BP) மாத்திரைகளை எடுப்பவர்கள் ஓ.ஆர்.எஸ் கரைசலை தவிர்க்கலாம். ஏனெனில் ரத்த அழுத்த மாத்திரைகள் ஓ.ஆர்.எஸ் உடன் வினைபுரிந்து ஆரோக்கியத்தை பாதிக்கும்.

இதய செயலிழப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் ஓ.ஆர்.எஸ் கரைசலை தவிர்க்கலாம்.

வீட்டிலேயே ஓ.ஆர்.எஸ் கரைசல் செய்யும் முறை: 1 லிட்டர் சுத்தமான குடிநீரில் 6 தேக்கரண்டி சர்க்கரை, அரை தேக்கரண்டி பொடி உப்பு ஆகியவற்றை கலந்தால் அதுவே ORS குடிநீர்.

நாள் ஒன்றுக்கு 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை லிட்டர், 2 – 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1 லிட்டர், 10 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 லிட்டர் வரை ORS குடிநீர் கொடுக்கலாம்.

வீட்டில் தயாரித்த ORS குடிநீரை 24 மணிநேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.