உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 5 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற டிங் லிரென் – குகேஷ் இடையிலான 7-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன.
இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் இன்று 7-வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரென், குகேஷ் பலப்பரீட்சை நடத்தினர். இதில் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடன் களமிறங்கினர். 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
இதன்மூலம் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 7 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர். நாளை 8-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.