ஏதோ ஒரு வலி ஏற்படுகையில் அதை எளிமையாகக் கடந்து விடுவோம். தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும் பட்சத்திலேயே மருத்துவரின் உதவியை நாடுவோம். இப்படி பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட வலியைச் சாதாரணமாக கடந்து சென்றது, அவருடைய உயிருக்கே 24 மணிநேரம் கெடு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 33 வயது பெண், விக்டோரியா டான்ஸன். இவருக்கு நீண்ட காலமாகவே தீராத வயிற்றுவலியும், சோர்வும் இருந்துள்ளது. இவர் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இரண்டு வேலைகளைப் பார்த்ததால், வாரத்தில் 60 மணிநேரம் வேலை செய்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தையும், மன அழுத்தத்தால் உண்டான சிறு சிறு அறிகுறிகளையும் கவனிக்கத் தவறி இருக்கிறார்.
வலி அதிகரிக்கவே, மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்களின் தொடர் பரிசோதனையில் அவருக்கு `க்ரான்ஸ் டிசீஸ்’ (Crohn’s disease) என்ற குடல்வீக்க பாதிப்பு இருப்பது தெரியவந்தது. வயிற்றிலும் சீழ் சேர்ந்து உயிருக்கே ஆபத்தாகும் நிலையில் இருந்துள்ளது.
மருத்துவர்கள் `24 மணிநேரம் தான் உயிருடன் இருப்பீர்கள். வாழ்க்கையின் இறுதிநாளில், சரியான சமயத்தில் மருத்துவமனைக்கு வந்திருக்கிறீர்கள் என்று கூறி, உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
வயிற்றில் இருந்த சீழ் முழுவதும் எடுக்கப்பட்டு, 18 இன்ச் அளவு குடலையும் நீக்கினர். இவருக்குப் பிடித்தமான அனைத்து உணவுகளையும் சாப்பிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ்க்கை முறையையே மாற்றிப்போடும் அறுவை சிகிச்சைக்கு இப்பெண் உள்ளாகி இருக்கிறார்.

இது குறித்து விக்டோரியா கூறுகையில், “என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க எனக்கு நேரமில்லை. நான் மிகுந்த வேதனையில் இருந்தேன், வலியிலிருந்து விடுபட எதையும் செய்வேன் என்பது மட்டுமே எனக்குத் தெரியும்” என்று அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட தன் அனுபவங்கள் குறித்துக் கூறியுள்ளார்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்… எனவே நம் உடலில் ஏற்படும் வலிகள், மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல், உடனே கண்டறிந்து களைவது நல்லது. உங்கள் உடலே, நீங்கள் உரிமை கொண்டாடக்கூடிய மிகப்பெரிய சொத்து!