விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 8 பட்டியல் சமூக குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட மாற்று சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், பட்டியல் சமூக மக்களுக்காக நிலையான சுடுகாடு ஏதுமில்லாமல்… ஓடை, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆகவே, தங்கள் சமூகத்திற்கு தனியாக சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என்று விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பல முறை அம்மக்கள் மனு அளித்துள்ளனர்.
ஆனால், நிலையான சுடுகாடு அமைத்து தராமல்… சூழ்நிலைக்கு ஏற்ப தற்காலிக இடங்களை மட்டும் அதிகாரிகள் அமைத்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு அந்த கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்ற பட்டியல் சமூகப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலையான சுடுகாடு இல்லாததால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டு வருவாய்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர் அந்த பெண்மணியின் உறவினர்கள்.