பட மூலாதாரம், FACEBOOK/SANSAD ATEEQ AHMAD YOUTH BRIDGE/BBC
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூ பால் கொலை வழக்கில், அதிக் அகமது, அஷ்ரஃப் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கொலை வழக்கின் சாட்சியான உமேஷ் பால் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைக்காக பிரயாக்ராஜ் இருவரும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
ஜான்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையால், அதிக் அகமதின் மகன் ஆசாத் என்கவுன்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த என்கவுன்டரில் ஆசாத்துடன் மற்றொரு துப்பாக்கிதாரியாக கூறப்படும் குலாம் என்பவரும் கொல்லப்பட்டார். ஆசாத், குலாம் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமையன்று நடந்தன.
அதிக் மற்றும் அஷ்ரஃப் படுகொலை செய்யப்பட்டது குறித்து உத்தர பிரதேச காவல்துறை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக் அகமது, அஷ்ரஃப் இருவரும் செய்தியாளர் சந்திப்பின்போது கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
அகிலேஷ் யாதவ் எழுப்பும் கேள்விகள்
பிரயாக்ராஜில் போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உத்தரபிரதேச காவல்துறை இதுவரை ஆதிக் மற்றும் அஷ்ரஃப் கொலை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அதிக் மற்றும் அஷ்ரஃப் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேமராவில் பதிவாகி அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தக் காணொளியில், தாக்குதல் நடத்தியவர்கள் போலீசார் பதிலடி கொடுக்கவில்லை.
இந்தப் படுகொலை குறித்துக் கேள்வி எழுப்பிய உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், “உத்திர பிரதேசத்தில் குற்றங்கள் உச்சத்தை எட்டியுள்ளன, குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகரித்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால், பொது மக்களின் பாதுகாப்பு என்னாவது?
இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி உருவாகியுள்ளது. சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற சூழலை உருவாக்குவது போலத் தெரிகிறது,’’ என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், உத்தர பிரதேச அரசின் நீர்மின் துறை அமைச்சர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் ஒரு ட்வீட்டில், “பாவமும் புண்ணியமும் இந்தப் பிறவியிலேயே கணக்கிடப்படுகிறது…” என்று எழுதியுள்ளார்.
அதே நேரம், உத்தர பிரதேச அரசைக் குறிவைத்து, “என்கவுன்டர் விதியைக் கொண்டாடுபவர்கள்தான் இந்தக் கொலைக்குக் காரணம்” என்று அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: