இந்நோயைக் கண்டு அறிய என்ன பரிசோதனைகள் தேவைப்படும்?
உதறுவாதத்தை சரியாக கண்டறிவதற்கு இன்னமும் முழுமையான பரிசோதனைகள் இல்லை. மருத்துவர்களால் முழுமையாக உடலை பரிசோதனை செய்வதின் மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும்.
-
CT, MRI ஸ்கேன் பரிசோதனையில் எந்த வித மாற்றமும் இருக்காது.
-
PET மற்றும் SPECT ஸ்கேன் பரிசோதனையில் ஓரளவு மாற்றம் தெரியும்.
-
இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் உதறுவாததத்தோடு சம்பந்தப்பட்ட தொல்லைகளை அறிவதற்கே உதவும்.
இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சற்று விவரம் தேவை?
உதறுவாதம் ஆரம்பித்து, சில ஆண்டுகளுக்குப் பின் நோயின் தன்மை தீவிரம் அடைந்து பல தொல்லைகள் வர வாய்ப்புண்டு. உதாரணம்: நிமோனியா, படுக்கப் புண், சிறுநீர் தாரையில் பூச்சித் தொல்லை, எலும்பு முறிவு. இத்தகைய தொல்லைகள் எல்லா நோயாளிகளுக்கம் ஏற்படும் என்ற கட்டாயம் இல்லை. இவைகளை ஓரளவிற்கு தக்க வைக்க முடியும். முடிந்தளவிற்கு சுயமாகவே மற்றவர்களை சார்ந்திருக்காமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஓரேடியாக படுத்து விட்டால் என்ன நேரலாம் என்பதற்கு கீழ்க் காணும் பழமொழியே ஒரு சான்றாகும்.
” நடந்தால் நாடும் உறவாடும்
படுத்தால் பாயும் பகையாகும்”
உதறுவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் எப்படி கவனித்துக் கொள்வது?
குடும்பத்தார் செய்ய வேண்டிய சில வழிமுறைகள்:
-
மருத்துவர் ஆலோசனைப்படி மருந்தை நேரப்படி கொடுக்க வேண்டும்.
-
இந்நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளினால் முதியோருக்கு பக்க விளைவுகள் வர வாய்ப்பு இருப்பதால் அருகிலிருந்து கவனமாக கண்காணிக்க வேண்டும்.
-
மூச்சை உள் இழுத்து, வெளியில் விட பயிற்சி அளிக்க வேண்டும்.
-
நடக்கும் பொழுது உதவியாளர் துணையுடன் நடக்க உதவ வேண்டும் அல்லது உபகரணங்களின் (கைத்தடி, வாக்கர்) உதவியுடன் நடக்கச் சொல்ல வேண்டும்.
-
கட்டிலின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் போட்ட படுக்கையில் படுக்க வைத்து கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகளையும் பானங்களையும் சாப்பிடக் கொடுக்க கூடாது மற்றும், குளிப்பதற்கு மிகவும் குளிர்ந்த அல்லது அதிக சூடான நீரை உபயோகப்படுத்த கூடாது.
-
அவர்கள் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும், படிப்பதற்கும் உற்சாகப்படுத்தி உதவ வேண்டும். உறவினர்களும் உடன் இருந்து உண்பது மிகவும் சிறந்தது.
-
உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும்.
-
தினசரி வேலைகளை தாங்களே செய்ய முடியாமல் சிரமப்படும் பொழுது, உறவினர்கள் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
-
படுக்கையிலேயே படுத்திருக்காமல் எழுந்த சிறு சிறு வேலைகளைச் செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.
மருத்துவத் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் உதறுவாதத்தை பூரணமாக குணப்படுத்தக் கூடிய சிசிச்சை முறைகள் அவசியம் வரும். நம்பிக்கையோடு அந்த பொன்னான நாளை ஆவலுடன் எதிர்ப்பார்ப்போம் !