இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று G-20 நாடுகளின் உச்சிமாநாடு தொடங்கியிருக்கிறது. இதற்காக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில், கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த G-20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க இருக்கின்றனர்.
இந்த நிலையில், G-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தொற்றுக்குப் பிறகு உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் இருக்கிறது. அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டுத் தீர்மானம் தேவை. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான பாதையை கண்டெடுக்க வேண்டும் என நான் பலமுறை கூறியிருக்கிறேன். உக்ரைன் மோதலை ராஜதந்திரம் மூலம் தீர்க்க வேண்டும். இந்த போரினால் உலகளாவிய உணவு, எரிபொருள் விநியோக சங்கிலி சீர்குலைந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில், 2-ம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அன்றைய தலைவர்கள் உலகம் அமைதிப் பாதையில் செல்ல தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.