ரஷ்யாவுடனான போரால், உக்ரைனில் மருத்துவம் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்திய மாணவர்கள் அதிகளவில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வந்தனர். ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினர். தொடர்ந்து இங்கு தங்களுடைய மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. `தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சட்டம், 2019ன் படி அத்தகைய இடமாற்றத்தை அனுமதிக்க எந்த விதியும் இல்லை. அத்தகைய தளர்வு வழங்கப்பட்டால், அது நாட்டின் மருத்துவக் கல்வியின் தரத்தை கடுமையாக பாதிக்கும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபோன்ற இடமாற்றம் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956-ன் எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் அது கூறியுள்ளது.