சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆகியோரை ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 62,233 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று காலை அவர், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அப்போது, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, செல்வபெருந்தகை எம்எல்ஏ, மாநில பொது செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், முத்தழகன், எம்.பி.ரஞ்சன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், ஏ.ஜி.சிதம்பரம், சிவராமன் மற்றும் நிர்வாகிகள் சுமதி அன்பரசு, சூளை ராஜேந்திரன், வின்சென்ட், மயிலை அசோக் உள்பட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஈவிகேஎஸ்.இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சென்ணை அண்ணா அறிவாலயம் வந்தனர். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி ஈவிகேஎஸ்.இளங்கோவன் வாழ்த்து பெற்றார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அமோக வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் இளங்கோவன்
Share
