இரவு நேரத்தில் டீ அருந்தக்கூடாதா? – மருத்துவர் விளக்கம்

Share

இரவு நேரத்தில் தொடர்ந்து டீ அருந்துவதால் தூக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நம்மில் பலருக்கு டீ, காபி குடிக்காவிட்டால் வேலையே ஓடாது. காலை, மாலை வேளைகளைத் தவிர சிலர் எந்த நேரமும் டீ, காபி அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலருக்கோ இரவு தூங்குவதற்கு முன்பும் டீ அருந்தும் பழக்கம் இருக்கும்.

டீ

ஆனால், ’இரவு நேரங்களில் டீ அருந்துவது தூங்குவதில் சிரமம் மற்றும் தலைவலி பிரச்னைகளை ஏற்படுத்தும். அதோடு கவலை உணர்வையும் ஏற்படுத்தும். முகப்பருக்கள் வரும்’ என சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. அதன் உண்மைத்தன்மை குறித்து மருத்துவர்களிடம் பேசினோம்…

உணவியல் நிபுணர் ஹரி லட்சுமி இதுபற்றி கூறுகையில், “இரவு நேரங்களில் டீ குடிப்பது என்பது, தூங்குவதில் சிரமம் மற்றும் தலைவலி பிரச்னைகள், கவலை ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். இதற்குக் காரணம் டீயில் இருக்கும் கஃபீன் (caffeine). தொடர்ச்சியாக டீ குடித்து வருகையில், இது நம்மை அடிமையாக்கி விடுகின்றது. ஒரு சிலர் இரவில் டீ இல்லையென்றால் தூக்கம் வராது என்பார்கள். டீ குடித்தால் தலைவலி சரியாகிவிடும் என்றும் சொல்வார்கள்.

உணவியல் நிபுணர் ஹரி லட்சுமி

அதெல்லாம் அவர்களின் மன எண்ணம் மட்டுமே. டீயில் இருக்கும் கஃபீன் தான், நாம் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் டீ அருந்தி வரவர, தினமும் டீ அருந்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் டீயைத் தவிர்த்து பால் அல்லது மஞ்சள் கலந்த பாலை அருந்தலாம். அது சிறந்தது” என்றார்.

இதுகுறித்து தோல் மருத்துவர் கதீஜா கூறுகையில், “இரவில் டீ அருந்தினால் முகப்பருக்கள் வரும் என்பது கட்டுக்கதை. டீயில் இருக்கும் ஃபேளவனாய்டுகள் அழற்சிக்கு எதிர்வினையாற்றுகிறது. எனவே, பிளாக் டீயாக வெறுமனே டீ அருந்துவது உடலுக்குக் கெடுதி இல்லை. ஆனால் டீயை பாலுடன் கலந்து அடிக்கடி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. பால் மற்றும் பால் பொருள்கள் அதிகம் உட்கொள்ளும் போது சிலருக்கு ஏற்படுகிற ஹார்மோனல் மாற்றம், பருக்களுக்குக் காரணமாகலாம்.

தோல் மருத்துவர் கதீஜா

டீயில் இருக்கும் கஃபீன் காரணமாக தூக்கம் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளன என்பதால் இரவில் டீயை தவிர்க்கலாம்.

சிலர் காபித்தூள், டீத்தூளை முகப்பொலிவுக்குப் பயன்படுத்துவார்கள். இவற்றை அழுத்தமாக ஸ்கிரப் செய்யும் போது, முகத்தில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com