பட மூலாதாரம், Ajay Aggarwal/Hindustan Times via Getty
இந்தியப் பிரதமர் மோதி புதன்கிழமை இஸ்ரேலுக்கு வருகை தரவிருக்கிறார் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும் இந்த பயணத்தின் “வரலாற்று முக்கியத்துவம்” குறித்தும் அவர் பேசினார்.
இந்த வருகை குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் அடித்தளம் இரண்டு உலகத் தலைவர்களுக்கிடையேயான வலுவான கூட்டணியாகும். புதுமை, பாதுகாப்பு மற்றும் பகிரப்பட்ட மூலோபாய பார்வையில் நாங்கள் கூட்டாளிகளாக உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
“நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு உறுதியளித்த நாடுகளின் கூட்டணியை நாங்கள் உருவாக்கி வருகிறோம். செயற்கை நுண்ணறிவு முதல் பிராந்திய ஒத்துழைப்பு வரை, எங்கள் கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மோதி, ஜெருசலேமில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகுவின் சமூக ஊடகப் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோதி பதிலளித்துள்ளார். இந்தியா-இஸ்ரேல் உறவுகள் குறித்த நெதன்யாகுவின் கருத்துகளுக்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேலுடனான வலுவான மற்றும் நீடித்த நட்புக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த நட்பு பரஸ்பர நம்பிக்கை, புதுமை மற்றும் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது” என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதி விரைவில் இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அவர் தனது சமூக ஊடகப் பதிவில் வருகையின் நேரம் அல்லது தேதியைக் குறிப்பிடவில்லை.
பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகமும் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.