இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் பதிலடி | irfan pathan hits back pakistan prime minister for teasing indian cricket team

Share

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்திய அணியை இங்கிலாந்து அணி தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 – 170/0 இடையே மோதல் நடக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் 151 ரன் இலக்கை பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி எட்டியது. அதேபோல் தற்போதைய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 168 ரன்னை இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி விரட்டி வெற்றி பெற்றது. இதனை குறிப்பிட்டுத்தான் இந்தியாவை கிண்டல் செய்திருந்தார் ஷெபாஸ் ஷெரீப்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து இர்பான் பதான் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவோம். ஆனால் நீங்கள் மற்றவர்களின் கஷ்டத்தில் மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். மற்றவர்களின் தோல்வியில் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். அதனால்தான் நீங்கள் உங்கள் நாட்டின் நலனில் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாயசாத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து அணி.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com