இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட பின், முதல் இரண்டு நாள்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் மருத்துவ அறிவுரையோடு பாராசிட்டமால், ஆன்டி – வைரல் மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சுடுதண்ணீர் குடிப்பது, தொண்டைக்கு இதமாக வெந்நீரால் வாய் கொப்பளிப்பது போன்ற சிறிய விஷயங்களால் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம். எதிர்ப்பாற்றல் குறைவானவர்கள், வயதானவர்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் தேவை.
இந்த வைரஸும் காற்றின் வழி பரவும் வைரஸ் என்பதால், கோவிட் 19 தொற்றுக்கு கடைப்பிடித்த தடுப்புமுறைகளின் மூலம் இந்த நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். முகக்கவசம் அணிவது, இருமல் வரும்போதும், தும்மும் போதும் முகத்தை மூடுவது, கைகளைக் கழுவுவது போன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இதுதவிர ஃப்ளு வைரஸ்களுக்கென தடுப்பூசி உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம், அப்போது வீரியமாக உள்ள ஃப்ளு வைரஸ்களுக்கு ஏற்றபடியான தடுப்பூசி வெளியாகும். இந்தத் தடுப்பூசி `Tetravalent’ எனச் சொல்லப்படும், நான்கு வகையான ஃப்ளு வைரஸ் தொற்றுகளிடமிருந்து பாதுகாப்பு தருவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். தடுப்பூசி செலுத்தி 15 நாள்களில் நம் உடலில் ஏற்படும் இந்த எதிர்ப்பாற்றல் ஒரு வருடம்வரை இருக்கும். அது போன்ற தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளலாம்” என கூறினார்.