லாக்டௌனுக்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து இப்போதுதான் மைதானங்களில் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நெருக்கடி நிலையிலும் தங்கள் அணிக்காக ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். முதல் டி20 போட்டியில் தோற்ற பிறகு இரண்டாவது போட்டிக்கும் திரளாக வந்து மைதானத்தை நிரப்பியிருந்தனர். இரண்டாவது போட்டியிலும் தோற்று டி20 தொடரையே இழந்த போதும் ரசிகர்கள் கைவிட்டுவிடவில்லை. மீண்டும் கூடினர். மைதானம் மீண்டும் நிரம்பியது.
அரசாங்கம், ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் எல்லாவற்றின் மீதுமே அவர்களுக்கு வெறுப்புதான் எஞ்சியிருந்தது. மைதானங்களில் கூடிய இந்த ஜனத்திரள் இலங்கை வீரர்களுக்கு ஒரு புது தெம்பை கொடுத்திருக்கக்கூடும். இந்தத் தேசத்திற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்னும் கேள்வியை வீரர்களுக்குள் எழுப்பியிருக்கக்கூடும். மனச்சோர்வில் அமைதியுற்று உழன்று கொண்டிருக்கும் மக்களின் உதட்டில் சிரிப்பை வரவழைப்பதை விட உன்னதமான காரியம் வேறில்லை. இலங்கை அணி அதை செய்தது.
ஓடிஐ தொடரின் முதல் போட்டியைத் தோற்ற பிறகும் நம்பிக்கையிழக்காமல் அடுத்த மூன்று போட்டிகளையுமே வென்று ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சியளித்தது. ஐந்தாவது போட்டிக்குச் செல்லும் முன்பே தொடரை வென்று சாம்பியன் ஆகியிருந்தது.
டி20 தொடரை இழந்தாலும் மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டியை இலங்கை வென்றிருந்தது. வெல்வது கடினம் என்ற சூழலிலிருந்து கேப்டன் தஸூன் சனாகா 25 பந்துகளில் 54 ரன்களையெடுத்து கடைசி ஓவர் வரை சென்று இலங்கையை வெல்ல வைத்திருப்பார்.
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களை இலங்கை அடித்தது. குணதிலகா, நிஷாங்கா, குஷால் மெண்ட்டீஸ் என டாப் ஆர்டரில் மூவருமே அரைசதம் அடித்து அசத்தியிருந்தனர். முழுமையாக ஒரு பேட்டிங் யுனிட்டாகவே சிறப்பாகச் செயல்பட்டிருந்தனர். பௌலிங்கிலும் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மழை குறுக்கே புகுந்து ஆட்டம் காட்டிவிட டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா வென்றிருந்தது. மழை இல்லாவிடில் முதல் போட்டியே இலங்கைக்குச் சாதகமாக முடிந்திருக்கக்கூடும்.