இந்திய அணிக்காகவும் மிக முக்கிய பங்களிப்புகளை வழங்கி வந்த சூர்யாவுக்கு சமீபத்திய நாட்கள் கொஞ்சம் சறுக்கல் மிக்கதாகவே நகர்ந்திருந்தது. இந்த ஐ.பி.எல் சீசனுக்குள் நுழைவதற்கு முன்பாக சூர்யா ஆடிய கடைசி மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருந்தார். வழக்கமாக வானை பிளக்கும் வகையில் ஷாட் ஆடும் சூர்யாவின் பேட்கள் தலைநிமிர மறுத்திருந்தன.
நாலாபுறமும் சிக்சர்களாக விளாசியவர், நாலாபுறமிருந்தும் விமர்சன கணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல். நடப்பு சீசனின் தொடக்க போட்டிகளிலுமே சூர்யாவால் தான் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கவே முடியவில்லை.
ஆனால், சீசன் செல்ல செல்ல தன் தன்னம்பிக்கையின் துணை கொண்டு சூர்யா மீண்டு வர தொடங்கினார்.
குறிப்பாக, மும்பை அணியின் உச்சபட்ச சேஸிங்கின் போதெல்லாம் சூர்யா ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுத்தார்.
ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை அணி 213 ரன்கள் டார்கெட்டை 19.3 ஓவர்களிலேயே எட்டியிருந்தது. அந்தப் போட்டியில் சூர்யா 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 55 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 189. பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்கு 215 ரன்கள் டார்கெட். அந்த டார்கெட்டை மும்பை அணி 18.5 ஓவர்களிலேயே எடுத்து முடித்திருந்தது. அதில் சூர்யா மட்டும் 31 பந்துகளில் 66 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 212.9. பெங்களூருவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு 200 ரன்கள் டார்கெட். அந்த 200 ரன்களை மும்பை அணி 16.3 ஓவர்களிலேயே எடுத்திருந்தது. சூர்யா 35 பந்துகளில் 83 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 237.14.