லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா என இரு அணியின் பேட்டிங்கும் தடுமாறுகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர்கள் அந்த அணியை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். 250 ரன்களை சேஸ் செய்து விடலாம் என்று தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நம்புகின்றனர்.
ஆனால், முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் அதிக ஸ்கோரை எட்டியவரான டேவிட் பெடிங்கம் ஆஸ்திரேலியா என்ன இலக்கு நிர்ணயித்தாலும் வெல்வோம் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் ‘கொலாப்ஸ்’! – முதல் இன்னிங்ஸில் ஸ்மித், பியூ வெப்ஸ்டர் நீங்கலாக ரபாடா, யான்செனிடம் காலியான ஆஸ்திரேலிய டாப் ஆர்டர், 2-வது இன்னிங்ஸில் யான்சென், ரபாடா, இங்கிடி, முல்டர் ஆகிய வேகப்பந்து வீச்சுக்கு 73 ரன்களுக்கு 7 விக்கெட் என்று மடிந்தனர். பிறகு ஸ்டார்க், கேரி இணைந்து 61 ரன்களைச் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்துள்ளனர். ஸ்டார்க் 16 ரன்களுடனும் நேதன் லயன் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். இன்று வந்தவுடன் இருவரையும் காலி செய்து ஆல் அவுட் செய்து விட்டால் 250-க்குள் இலக்கை விரட்ட தென் ஆப்பிரிக்கா நம்பிக்கையுடன் களமிறங்கலாம்.
2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 73 என்று சரிவடைந்தது ஆஸ்திரேலியா பேட்டிங்கை மறு வரைவு செய்ய வேண்டியுள்ளதைக் காட்டுகிறது. காரணம் தென் ஆப்பிரிக்காவின் பலவீனமான பவுலர்களான இங்கிடி, முல்டர் ஆகியோர் ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் சரிவுக்குக் காரணமாயினர்.
முதல் இன்னிங்ஸில் கடைசி விக்கெட்டுகளையும் டாப் ஆர்டரையும் சடுதியில் இழந்த ஆஸ்திரேலியா நேற்று 2-வது இன்னிங்ஸில் லபுஷேன், ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் விக்கெட்டுகளை 7 ஓவர்களில் இழந்தது.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் சரிவு எப்படி அவர்களை வெற்றிகரமான அணியாக வைத்திருக்கிறது என்ற கேள்வியை எழ செய்கிறது. பெர்த்தில் ஷமார் ஜோசப்பிடம் 94 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து கொலாப்ஸ் ஆயினர். இந்தியாவிடம் பெர்த்தில் கொலாப்ஸ் ஆகினர். மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை 68 ரன்களுக்கு இழந்தனர். ஆஸ்திரேலிய டாப் ஆர்டரைத் துருவி ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது.
ஈஎஸ்பின் கிரிக் இன்போ புள்ளி விவரங்களின் படி உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன் இடையே 6 இன்னிங்ஸ்களில் 49 ரன்கள்தான் வந்துள்ளது. குறிப்பாக கவாஜா தொடர்ந்து தரமான வேகப்பந்து வீச்சிடம் ஸ்லிப்பில் ஆட்டமிழந்து வருகிறார். இந்த டெஸ்ட்டில் இரு முறையும் ரபாடா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய போது எட்ஜ் செய்து வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்கா நம்பிக்கை: 2-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 விக்கெட்டுகள் உள்ளன. இன்று வந்தவுடன் ஆஸ்திரேலியா விரைவில் ரன்களை எடுத்து கொஞ்சம் மேகமூட்டமாக் இருக்கும் காலை வேளையிலேயே தென் ஆப்பிரிக்காவை இறக்கி உணவு இடைவேளக்கு முன் பாடாய்ப் படுத்த திட்டமிடுவார்கள்.
தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற திட்டமிடுவார்கள். தென் ஆப்பிரிக்க அணியின் பெடிங்கம் கூறும்போது, “இது ஒரு அருமையான வாய்ப்பு. வெற்றி பெறும் வாய்ப்பில் உற்சாகமடைந்துள்ளோம். முடிவு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம். ஆனால் ஒரு அணியாக நம்புகிறோம். ஓய்வறையில் வீரர்களிடத்தில் நிறைய வெற்றி நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த பவுலிங்கிற்கு எதிராக இரட்டை மனோநிலையில் ஆடக்கூடாது. தடுப்பாட்டமோ, அட்டாக்கோ தடையற்ற மனோநிலையில் ஆடுவது அவசியம்” என்கிறார் பெடிங்கம்.
கம்மின்ஸ் கூறும் போது, “200 ரன்கள் முன்னிலை என்பதே நல்ல லீட் தான். இன்னும் 20-30 ரன்கள் சேர்க்க முடிந்தால் அதன் பிறகு ஆக்ரோஷமாகக் கள வியூகம் அமைத்து பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்புகளைக் கண்டடைவோம்” என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு 60% வெற்றி வாய்ப்பு, தென் ஆப்பிரிக்காவுக்கு 40% வெற்றி வாய்ப்பு. ஆனால் அதற்கு லீட் 275-300 என்று சென்று விடக்கூடாது என்பது முக்கியம்.