சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக விசாரித்தபோது, ’கோடைக்காலத்தில் ஐஸ் விற்பனை அதிகரிக்கும்’ என கணிக்கப்பட்டு அதன் உற்பத்தியை அதிகரிக்க ஆவின் திட்டமிட்டது. இதனால், உற்பத்தியை அதிகரிக்க விடுமுறை நாள்கள் என்பதால் பள்ளிச் சிறார்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. ஆவின் ஒப்பந்த நிறுவனம் ஒன்று, 12-ம் வகுப்பு படித்த சிறுவர், சிறுமிகளைச் சிறார் தொழிலாளர்களாகப் பணியில் அமர்த்தியிருக்கிறது என்கிறார்கள்.
இந்த நிலையில், சிறார் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் வீடியோ காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் தங்கள் கண்டனங்களை முன்வைத்தனர். குறிப்பாக, அ.ம.மு.க பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனும் தன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவுசெய்திருந்தார்.
இது தொடர்பாக நாம் மேலும் விசாரித்தபோது, “தற்போது ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனம், குறைவானவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு, அரசிடம் முழுத் தொகையைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆகவே, ஆட்கள் பற்றாக்குறை, செலவைக் குறைக்க சிறார் தொழிலாளர்களை நியமித்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எனினும், இதைத் தீவிரமாகக் கண்காணித்திருக்க வேண்டியது அரசின் கடமைதானே” என்னும் கேள்வியை முன்வைக்கின்றனர் உள் விவரம் அறிந்தவர்கள்.