தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கப் பார்ப்பது ஏன் – முதல்வர் கேள்வி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கும் ஒரு சட்டத்திற்கு, நியமன ஆளுநர் கையெழுத்திற்காக காத்திருப்பதை விட மக்களாட்சிக்கு அவமானம் இல்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கப் பார்ப்பது ஏன் என வினவிய மு.க.ஸ்டாலின், அதற்காகத் தான் அவர் அனுப்பி வைக்கப்படாரா என கேள்வி எழுப்பினார்.
ஆளுநரை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின்
சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் அரசு விளக்கம் அளித்த பிறகும் பேசி வரும் ஆளுநர், குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறாரா எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், தன்னை சர்வ அதிகாரம் படைத்தவர் என்று நினைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
திராவிடத்தை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கண்டு பயப்படுகிறார் என்றும் ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு உண்டு என்பதால் அஞ்சுகின்றனர். திராவிட மாடல் காலாவதியான கொள்கை அல்ல என பல்லாவரத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு
ஜெய்ப்பூரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்
நீட் தேர்வு நிறைவு
நாடு முழுவதும் 499 நகரங்களில் மதியம் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு நிறைவுபெற்றது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவ – மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
லக்னோ அணிக்கு 228 ரன்கள் இலக்கு
அகமதாபாத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 227 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய குஜராத் அணி தொடக்க வீரர்கள் சகா 43 பந்துகளில் 81 ரன்களும் சுப்மன் கில் 51 பந்துகளில் 94 ரன்களும் விளாசினர். 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.
நீட் தேர்வு தொடங்கியது
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்கள் கடும் சோதனைக்கு பின்னர் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
லக்னோ அணி பந்துவீச்சு
ஐபிஎல் தொடர் 2023 : இன்று நடைபெற்று வரும் 51வது போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
பெங்களூருவில் 10 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்ற பிரதமர் மோடி : மலர் தூவி வரவேற்ற தொண்டர்கள்
கர்நாடகத்தில் வரும் 10 ஆம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலையுடன் பரப்புரைமுடிய உள்ள நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் தங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 26 கிலோமீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று இரண்டாவது நாளாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த நிலை பரப்புரை வாகனத்தில் நின்றபடி பயணித்தார். கெம்பே கவுடா சிலையில் இருந்து எம்.ஜி. சாலையில் உள்ள trinity circle வரை அவருக்கு பாஜகவினர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள் – போலீசார் தீவிர விசாரணை
அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள் யார் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை 6:15 மணிக்கு அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி ரயில் நிலையம் அருகில் செல்லும்போது மர்ம நபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசி உள்ளனர். இதில் ரயில் பெட்டியின் கண்ணாடி லேசாக உடைந்தது .
இது குறித்து வந்தே பாரத் ரயில் இன்ஜின் டிரைவர் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் மகேந்திரவாடி அருகே ரயில் செல்லும் போது கல் வீசியுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்ப்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக வழக்கறிஞர் மிலானி அளித்த புகார் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 125A(1), 125A(ii), 125A(iii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்காம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர்.
நாளை காலைக்குள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை மையம் தகவல்
“நாளை காலைக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இது நாளை காலைக்குள் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது மே 9-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, மத்திய வங்கக்கடலை நோக்கி கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் போது அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அதன் பாதை மற்றும் தீவிரம் குறித்த விவரங்கள் வழங்கப்படும் எனவும்
இன்றும் நாளையும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் வருகை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் தன் தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டி ஆர் பாலு, பொன்முடி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் உள்ளார்.
3 ஆம் ஆண்டில் திமுக அரசு – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இன்று முதல் 3 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு கூடுதல் மார்க் – சு. வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு சி.பி.எஸ்.இ பதில்
சி பி எஸ் இ 12 ஆம் வகுப்புதமிழ்நாடு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கோரிய சு. வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு சி பி எஸ் இ பதிலளித்துள்ளது. அதில் “தேர்வுத் தாள் திருத்தம் நடந்து கொண்டு இருப்பதாகவும், திருத்தம் முடிந்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக மாணவர்களின் மதிப்பெண் விவரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்று சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் சன்யாம் பரத்வாஜ் பதில் அளித்துள்ளார்.
CBSE – 12 ஆம் வகுப்பில் தமிழ்நாடு மாணவர்களுக்கு இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்கள் மிக கடுமையாக இருந்ததால் கூடுதல் மதிப்பெண் வழங்க கேட்டிருந்தேன்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக மதிப்பெண் விவரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென CBSE பதில். pic.twitter.com/3onNs9nJcJ
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 7, 2023
முதலமைச்சரின் உழைப்பு உடலாற்றலை மீறியது – கவிஞர் வைரமுத்து புகழாரம்!
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளா. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவில் “ஈராண்டு ஆட்சியைச் செம்மனத்தோடு சிந்தித்தால் நன்மை மிகுதி இன்மை குறைவு என்பது புலப்படும் முதலமைச்சரின் உழைப்பு உடலாற்றலை மீறியது வெள்ளம் போல் பள்ளம் நோக்கியே பாய்கிறது அருகிக் கிடக்கும் நிதியங்களும் இறுகிக் கிடக்கும் இதயங்களும் சிறிது மேம்பட்டால் சிகரம் தொடலாம் தொடுவீர்!” என பதிவிட்டுள்ளார்.
ஈராண்டு ஆட்சியைச்
செம்மனத்தோடு சிந்தித்தால்
நன்மை மிகுதி
இன்மை குறைவு
என்பது புலப்படும்முதலமைச்சரின் உழைப்பு
உடலாற்றலை மீறியது
வெள்ளம் போல்
பள்ளம் நோக்கியே பாய்கிறதுஅருகிக் கிடக்கும் நிதியங்களும்
இறுகிக் கிடக்கும் இதயங்களும்
சிறிது மேம்பட்டால்
சிகரம் தொடலாம்தொடுவீர்!
— வைரமுத்து (@Vairamuthu) May 7, 2023
”இருண்ட ஆட்சிக்கு… இந்த ஈராண்டே சாட்சி..” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது ட்விட்டரில் விமர்ச்சித்துள்ளார். அதில் இருண்ட ஆட்சிக்கு… இந்த ஈராண்டே சாட்சி.. என பதிவிட்டுள்ளார்.
*இருண்ட ஆட்சிக்கு..,*
*இந்த ஈராண்டே சாட்சி..,* pic.twitter.com/4FCOeSHCMZ— DJayakumar (@offiofDJ) May 7, 2023
தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி இன்று திரைப்படாது – திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டதாக கூறி, இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தமிழ்நாட்டில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் இந்தி பதிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழுத்தம் வருவதாக கூறப்படுகிறது. எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி இந்தி பதிப்பு திரைப்படமும் இன்று திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவது குறித்து இன்று ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் கலந்தாய்வு ஒத்திவைப்பு
ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அணைகளின் இன்றைய நிலவரம் என்ன?
முல்லைப் பெரியாறு அணை:
நீர் மட்டம் – 117.25அடி(142).
நீர் இருப்பு – 2,132மி.கன அடி.
நீர் வரத்து – 204கன அடி.
நீர் வெளியேற்றம் – 100கன அடி ( தமிழகத்திற்கு)
வைகை அணை நிலவரம்:
நீர் மட்டம் – 52.46அடி(71).
நீர் இருப்பு – 2,331மி.கன அடி.
நீர் வரத்து – 113 கன அடி.
நீர் வெளியேற்றம் – 72கன அடி.