கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, நகம் கடிப்பது போன்ற கெட்ட பழக்கங்கள் சிலரிடம் இருக்கும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். இவற்றைப்போன்ற ஒரு கெட்ட பழக்கம் ஆண்களிடம் மட்டுமே இருக்கிறது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்தப் பழக்கம் பற்றியும், அதனால் ஏற்படுகிற தேவையற்ற பயம் பற்றியும், அதை ஏன் செய்யவே கூடாது என்பது பற்றியும் இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.

”டாக்டர், என்னோட penis-ல யூரின் போற இடம் சிவப்பா இருக்கு. சம்டைம்ஸ் கட்டி இருக்கிற மாதிரி தோணுது. இதனால ஏதாவது பிரச்னை வருமா..?”
”டாக்டர், என்னோட ஆணுறுப்புல ஒன்பாத்ரூம் போற இடத்துல வெள்ளை வெள்ளையா புள்ளிங்க இருக்கு. இது ஏதாவது பிரச்னையா..?”
”டாக்டர், என்னோட உறுப்புக்குள்ள கறுப்பு கறுப்பா புள்ளிங்க இருக்கு. கேன்சரா இருக்குமோன்னு பயமா இருக்கு…”
”மேலே சொன்ன சந்தேகங்களுடன் நிறைய ஆண்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். பல ஆண்களிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. சிறுநீர் வருகிற பாதையை அடிக்கடி பிரித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எதற்காக அப்படிச் செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள்தான் ஆணுறுப்பு தொடர்பான சந்தேகங்களுடன் அடிக்கடி டாக்டர்களை சந்தித்துக்கொண்டிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை மிகவும் அபத்தமான விஷயமிது. ஆணுறுப்பின் உள்பகுதியில் லேசான கோழைப்படலம் இருக்கும். இதன் காரணமாகத்தான் அந்தப் பகுதி எப்போதும் சிவந்தே இருக்கும். அங்கு புள்ளிகள் இருந்தால், அவர்களுடைய தோலின் அமைப்பேகூட அப்படியிருக்கலாம். அதை தொற்றுநோய் என்று பயந்துவிடுவார்கள். அங்கிருக்கும் சதைப்பகுதியை புற்றுநோய்க் கட்டி என்று நினைத்து விடுவார்கள்.
ஒரு செக்ஸாலஜிஸ்ட்டாக சொல்கிறேன். ஆண்கள் தொடக்கூடாத இரண்டு இடங்கள், அவர்களுடைய கண்ணின் கருவிழிகளும் ஆணுறுப்பின் உள்பகுதியும்தாம்… கண்ணில் கருவிழியில் ரத்த ஓட்டமிருக்காது என்பதால், அந்தப் பகுதியைத் தொட்டால் விரல்களிலிருக்கும் கிருமிகள் கண்ணில் பிரச்னையை ஏற்படுத்தும். அதேபோல விரலில் இருக்கிற கிருமிகள், ஆணுறுப்பினுள்ளே சென்று தொற்றை ஏற்படுத்தலாம். இதுபோன்ற கெட்ட பழக்கத்தை இன்றே நிறுத்தி விடுங்கள். அதுதான் நல்லது” என்கிறார் டாக்டர் காமராஜ்.