இந்தக் குழந்தைகள் சில பொருள்களைத் தொட விரும்ப மாட்டார்கள். உதாரணமாக சாம்பார் கலந்த சோற்றைத் தொட விரும்பவில்லை என நினைத்துக் கொள்ளுங்கள். ஏன் உனக்குத் தொடப் பிடிக்கவில்லை எனக் கேட்டால் கேள்வியும் புரியாது, பதிலும் சொல்லத் தெரியாது. குழந்தைகள் நிலையும் பரிதாபமாக இருக்கும். அதே வேளையில் பெற்றார்கள் நிலையும் தர்மசங்கடம்தான்.
இதற்கு மனோதத்துவ அடிப்படையில் காரணம் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்படும். உதாரணமாக அரிசி, கடுகு, குன்றி மணிகள், ஜெல்லி, கூழ் போன்ற பொருள்கள் சேர்த்த தண்ணீரில் கையைவிட்டுப் பிசையவைத்து பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் உள்ளங்கால்களுக்குப் பல உணர்வுகளைக் கொடுக்கும் வண்ணம் நடைபாதைகள் (Sensory walk) அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வெறும் கால்களில் நடக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
பல உணர்வுகளைக் கொடுக்கும் இந்த நடைபாதை பத்து அடிக்குக் கூழாங்கற்கள், அடுத்த பத்து அடிக்கு மணல், அடுத்து சல்லிக்கற்கள், அடுத்து புல் தரை எனக் கால் பாதத்திற்குப் பல உணர்வுகளைக் கொடுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாதையில் நடந்தால் மன அழுத்தம் குறையும்.