ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இத்தகைய பிரச்னைகள் அதிகம் இல்லை என்பதே காரணம்.
இந்த நோய் எதனால் வருகிறது எனச் சரியாக கண்டறியப்படவில்லை. இதுவாக இருக்கலாம் அதுவாக இருக்கலாம் எனப் பல காரணங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்:
1. குடலில் வலிரிக் அமிலம் (Valeric acid) மற்றும் டாரின் (Taurine) என்ற வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகள் இல்லாததால் ஆட்டிசம் வருகிறது என எலிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டறியப்பட்டுள்ளது. எலிக்கு வலிரிக் அமிலப் பொருளை மருந்தாகக் கொடுத்தால் ஆட்டிச குறைபாடு சற்று குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது கைகழுவப் பயன்படுத்தும் சோப்பு மற்றும் கிருமிநாசினிகளையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இவை சிறிதளவு நம் உடலுக்குள் சென்று நமக்குத் தேவையான மற்றும் பயன்மிக்க நுண்ணுயிரிகளை அழிக்கின்றனவோ என சிந்திக்கத் தோன்றுகிறது.
2. கர்ப்பகாலத்தில் பூச்சிக் கொல்லி போன்ற கேடு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் அடங்கிய காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுவதால் வருகிறது எனவும் ஆராய்ச்சி குறிப்புகள் அறிவுறுத்துகின்றன.
3. கர்ப்பகாலத்தில் உடலுக்கு ஒவ்வாத மெர்குரி, காரீயம் போன்ற அணுக்கள் அடங்கிய உணவு மற்றும் தண்ணீரும் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
4. கர்ப்பகாலத்தில் வரும் சில வைரஸ் தாக்கத்தால் இந்த நோய் வருகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
5. இது ஒரு மரபணு நோய் எனவும் சில ஆராய்ச்சிக் குறிப்புகள் சொல்கின்றன.
6. MMR என்ற நோய் தடுப்பூசி மேல் குற்றம் சாட்டப்பட்டு பின் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்திற்கும் தொடர்பில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
7. இயல்பாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு குறைவு எனவும் அறுவை சிகிச்சை முறையில் ( C-Section) பிறந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இயல்பான பிறப்பின்போது ஏற்படும் அதீத அழுத்தம் காரணமாக குழந்தையின் உடலில் குறிப்பாக முளைக்கு ரத்த ஓட்டம் வலுவடைவதாகக் கருதப்படுகிறது. அதனால் இவர்களுக்கு ஆட்டிச குறைபாடு குறைவு என கூறப்படுகிறது. இந்த வாய்ப்பு அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகளுக்கு இல்லை. எனவே அறுவை சிகிச்சை முறையில் பிறந்த சில குழந்தைகள் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
8. தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி வருகைக்குப் பின்னர் இந்த நோய் அதிகமாகியுள்ளது எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
9. கூட்டுக்குடும்பம் உடைந்து தனிக்குடும்பமாக இருந்தால் இத்தகைய குழந்தை பிறப்பு அதிகரிக்கும் எனவும் பதிவாகியுள்ளது..
10. நான் பார்த்தவரையில் வேலைக்காக வெளிநாடுகளுக்குப் போய் வாழும் தம்பதியினருக்கு இத்தகைய குழந்தைப் பிறப்பு அதிகம் எனக் கணிக்க முடிந்தது.
மேற்கண்ட பத்தில் ஏதோ ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணத்தினால் இந்தக் குறைபாடு வருகிறது. கைக்குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில் தனித்து விடப்படுவதால் இந்தப் பிரச்னை வரலாமோ என எண்ணவும் தோன்றுகிறது.