நவராத்திரியில் சரஸ்வதி பூஜைக்கு, கல்கண்டு சாதம் படைப்பது அநேக பக்தர்களின் வழக்கம். நான்முகன் தேவியான நாமகளுக்கு, கல்கண்டு சாதம் படைத்து வழிபட்டால் இனிய சொல்கொண்டு நம்மைக் காப்பாள் என்பது நம்பிக்கை. ஞானமழை முகிலான வாணிக்குப் பிரியமான நைவேத்தியத்தைப் படைத்து நலங்கள் யாவும் பெறுவோம்.
தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்
பால் – ஒரு கப்
டைமண்டு கல்கண்டு – ஒரு கப்
கிராம்பு – 5
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
முந்திரி – 10
திராட்சை – 10
நெய் – 50 கிராம்
செய்முறை:
கழுவிக் களைந்த அரிசியைக் கொதிக்கும் பாலில் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். சாதம் இறுக ஆரம்பிக்கும்போது கல்கண்டுகளைக் கொட்டிக் கிளறவும். இப்போது சாதம் இளகும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கிராம்பு சேர்த்துக் கிளறவும். மீதமிருக்கும் நெய்யைச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். இறுதியாக ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். கொஞ்சம் கல்கண்டுகளை மேலாகத் தூவிப் படைக்கலாம். தேங்காய்த் துருவல், குங்குமப்பூ தூவி அலங்கரித்தும் படைக்கலாம்.