மழை, குளுகுளு வானிலை என இதமான சூழலுக்கு வழக்கத்திலிருந்து விலகி, வித்தியாசமாக என்ன சாப்பிடலாம்…? பலரின் தேடலும் இதுவாகவே இருக்கும் நிலையில், இப்போது சீசன் தொடங்கியுள்ள மரவள்ளிக்கிழங்கில் விதம் விதமான உணவுகளைச் செய்து ருசிக்கலாம். ஆரோக்கியம், சுவை என இரண்டுக்கும் உத்தரவாதம் தரும் மரவள்ளிக்கிழங்கில் வடை முதல் கிரேவி வரை என்னென்னவோ செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாத சேதி… முயற்சி செய்யத் தயாரா?
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ
ஊறவைத்த கடலைப்பருப்பு – 200 கிராம்
பச்சரிசி மாவு – ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி – ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்)
பூண்டு – 10 பல்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 4
புதினா – ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் – 100 கிராம் (நறுக்கவும்)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 500 மில்லி
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி எடுக்கவும். மரவள்ளிக்கிழங்கு மசால் வடை தயார். இது தயிர் சாதத்துக்கு சுவையாக இருக்கும்.