தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், 2017-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. சமீபத்தில், நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,“ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 220 மற்றும் ரத்த அழுத்தம் 120 ஆக இருந்தது. அந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சின் மூலம், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு நோயாளியின் உடலில் சர்க்கரையின் அளவு அவ்வளவு முக்கியமானதா என்ற சந்தேகம் ஏற்படக்கூடும். இதுகுறித்து நாகர்கோயிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபியிடம் கேட்டோம்…
“அறுவை சிகிச்சைக்கு முன் சர்க்கரை அளவைப் பரிசோதிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. அறுவை சிகிச்சைக்கு முன்பு கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளில் சர்க்கரை அளவு பரிசோதனை என்பது முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இதை மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்பு, மயக்கவியல் நிபுணர் பரிசோதனை செய்து கொள்வார்.
ஏற்கெனவே நீரிழிவு நோய் இருப்பவரோ, அல்லது நீரிழிவு நோய் இல்லாதவராகவே இருந்தாலும் கூட அறுவை சிகிச்சைக்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருந்தால் முதலில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும். உடலில் சர்க்கரை அளவை குறைத்த பின்னர் அறுவை சிகிச்சையை மேற்கொள்வர்.