தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டைச் சேர்ந்தவர் சினேகன்(14). இவர் தேனி மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவர் இரண்டு முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அதிக குளிர் கடலான வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கிலோ மீட்டர் தூரத்தை ஃப்ரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவெடுத்தார்.
இதற்காக செப்டம்பர் 2-ம் தேதி வடக்கு அயர்லாந்து சென்ற மாணவர் 12 முதல் 15 டிகிரி வரை குளிர்ந்த கடலில் 10 நாள்கள் பயிற்சியாளர் விஜயகுமார் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றார். இதையடுத்து செப்டம்பர் 20-ம் தேதி அந்நாட்டின் நீச்சல் பயிற்சியாளர்களுடன், பாதுகாப்புடன் கடலில் நீந்தினார். அந்நாட்டின் நேரப்படி செப்டம்பர் 21 காலை 6.30 மணிக்கு துவங்கி வட அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரையிலான 35 கிலோ மீட்டர் தூரத்தை மொத்தம் 14.39 மணி நேரம் நீந்திக் கடந்தார்.