முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும்போதெல்லாம், காங்கிரஸ் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. தமிழக அரசு, ஆளுநர் தரப்பு, மத்திய அரசு தரப்பு, பேரறிவாளன் தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்து இன்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில், காங்கிரஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை..வழக்கு கடந்துவந்த பாதை
அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாளை காலை 10 மணி முதல் 11 மணிவரை வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல.. உச்சநீதி மன்றதால் தண்டனை பெற்றவர் .
இன்று விடுதலை .
அன்று
கோபல் கோட்சே
இன்று#பேரறிவாளன்— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 18, 2022
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் விருதுநகர் எம்பியுமான மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல.. உச்சநீதி மன்றதால் தண்டனை பெற்றவர் . இன்று விடுதலை . அன்று கோபல் கோட்சே, இன்று பேரறிவாளன்’ என பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.