மதுரை: அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எண்ணம் என ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சாமானியரும் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அதிமுக. தொண்டர்களை உயர்ந்தவர்களாக நினைத்தவர் எம்.ஜி.ஆர். தலைமைக்கு உண்மையாக செயல்பட்டதால் பல்வேறு பதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா. நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கட்சிக்குள் பிளவு இருந்தால் தொண்டர்கள் நம்பிக்கை இழப்பார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கட்சியில் பணியாற்றி வருகிறேன்.
அனைவரும் ஒரே குடும்பமே; ஒன்றாக இணைந்தால் வெற்றிபெற முடியும். அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்பதே அடிப்படை தொண்டர்களின் ஒருமித்த உணர்வு. கடந்த 2 மாதங்களில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளார். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓபிஎஸ் தனது ஆவலை வெளிப்படுத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சிக்கு அவரது உழைப்பே காரணம்; அதை நான் வரவேற்கிறேன். அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பது தான் ஓபிஎஸ்-ன் நோக்கம். ஈபிஎஸ் பதவிக்காக தொண்டர்களை குழப்பி வருகிறார். இவ்வாறு கூறினார்.