“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு முதன்முதலில் நிபா பாதிப்பு தெரியவந்தது. உடனடியாக நாங்கள் அவர்களின் மருத்துவ வரலாற்றை கேட்டறிந்து ஆராய்ந்தோம். அப்போது அந்தக் குழந்தைகளின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்தது.
பின்னர் நாங்கள் அந்த மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டறிந்தோம். அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும், உடனடியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அந்த நபர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டார் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் மனைவியிடம், கணவரைப் பற்றிய விவரத்தை கேட்டறிந்தோம். அவரின் கணவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவருக்கு அறிகுறிகள் இல்லாமல் திடீரென மந்தமான பேச்சு, கவனம் சிதறுதல் மற்றும் டிப்ளோபியா (இரட்டை உருவம் தெரிவது) போன்ற அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவித்தார். அந்தப் பெண்ணின் 9 வயது மகனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் நிமோனியாவின் அறிகுறிகள் இல்லை என நான் உணர்ந்தேன். பின்னர் நடத்திய சோதனையில்தான், இவர்கள் குடும்பத்துடன் நிபாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தக் குடும்பத்தினர் சூபிகடா பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்குதான் 2018-ல் முதன்முதலில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்டார்.