திண்டிவனம்: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. விரைவில் அதிமுக முழுமையாக ஒரு கட்டுப்பாட்டில் வரும். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்படும் தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் தலைமை ஏற்றதும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு நல்ல பதவிகள் வழங்கப்படும். உண்மையான தொண்டர்களால்தான் இந்த இயக்கம் இன்று உயிர்ப்போடு இருக்கிறது. உண்மையான தொண்டர்களை நம்பினார் ஜெயலலிதா; நூற்றாண்டு கடந்தாலும் இயக்கம் மக்களுக்காகவே இயக்கும் என ஜெயலலிதா சூளுரைத்தார். மக்கள் ஆதரவு எனக்கு அதிகளவில் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த ஆட்சியை நான் வழங்குவேன், விரைவில் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பேன். விரைவில் அதிமுக கொடியையும் கட்சியையும் கைப்பற்றுவோம் எனவும் கூறினார்.
அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: சசிகலா பேட்டி
Share
