மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். முதல்வேலையாக அவர் யூரின் ரொட்டீன் டெஸ்ட் செய்யச் சொல்வார். தேவைப்பட்டால் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டும் செய்யப்பட்டு, எந்தக் கிருமியால் தொற்று ஏற்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படும். யூரின் கல்ச்சர் டெஸ்ட் செய்வதால், எந்த ஆன்டிபயாடிக் கொடுத்தால் பிரச்னை குணமாகும் என்பது தெரியவரும். அதற்கேற்ற மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார்.
ஒரு முறை மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக்கையே ஒவ்வொரு முறை இன்ஃபெக்ஷன் வரும்போதும் எடுக்கக்கூடாது. ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் இந்தத் தொற்றானது ரத்தத்தில் கலந்திருக்கிறதா என்பதையும் கண்டறிய முடியும். தேவைப்பட்டால் சிலருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படும். அதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். சில நேரங்களில் ஐவிபி ( Intravenous pyelogram ) எனப்படும் எக்ஸ்ரே எடுக்கச் சொல்வார்கள். சிஸ்டோஸ்கோப்பி (Cystoscopy) டெஸ்ட்டின் மூலம் சின்ன கேமராவை உள்ளே செலுத்தி, சிறுநீர்ப்பையில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறதா, அடிக்கடி இன்ஃபெக்ஷன் வர காரணம் என்ன என்பதெல்லாம் கண்டறியப்படும். சிலருக்கு சிடி ஸ்கேனும் தேவைப்படலாம்.
ஒருவருக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் வந்தால் அதை “ரெக்கரன்ட் யூரினரி ட்ராக்ட் இன்ஃபெக்ஷன்’ (Recurrent Urinary Tract Infections) என்று சொல்வார்கள். அதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்தால் அதன் விளைவாக குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவருக்கு ஒரு வருடத்தில் 3 முதல் 6 முறை இன்ஃபெக்ஷன் வந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனையும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.