“ஒரு வீரர், எவ்வகையில், செஸ் ஆடுகிறார் என்பதிலேயே, அவரது குணாதிசயங்கள் எதிரொளிக்கும்” என ரஷ்யாவின் செஸ் கிராண்ட் மாஸ்டரான கிராம்னிக் கூறுவார். இது, வீரர்களைவிட ஒரு பயிற்சியாளருக்கு, பலமடங்கு பொருந்தும். ‘உங்களால் முடியும்’ என்ற நம்பிக்கையை அணிக்குள் விதைப்பதும் பயிற்சியாளர்தான், சதுரங்கத்தில் காய்களை நகர்த்தும் எதிரணிகளே அறியாமல், சதுரங்கக் கட்டங்களையே நகர்த்துவதும், அவர்தான். அவரது வியூகங்கள்தான், அணியை கால இயந்திரத்தில் ஏற்றி, பல வருடங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்லும், சின்னத் தவறுகள்கூட, பின்னோக்கி நகர்த்தும்!
இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இதில் எந்த சட்டகத்துக்குள் பொருந்திப் போகிறார் என்று ஆழமாக ஊடுருவினால், வருத்தப்படும்படியாக இரண்டாவதை நோக்கியே கைகாட்ட வேண்டியுள்ளது.
முகமது பின் துக்ளக்கை, மோசமான மன்னனாக வரலாறு விவரிப்பதுண்டு, காரணம், டெல்லியையும், தௌலதாபாத்தையும், தலைநகராக மாற்றி மாற்றி அறிவித்து, மக்களைத் தவிக்க விட்டது உள்ளிட்ட அவருடைய பல நிர்வாகக் கோளாறுகளால் தான்.
கடந்தாண்டு உலகக் கோப்பை கைநழுவுகிறது, கேப்டன், பயிற்சியாளர் என எல்லோருமே மாறுகிறார்கள், மாதக்கணக்கில் புதிய அணுகுமுறைகளைக் கையாளுகிறார்கள், ஆனால் அடுத்த ஆண்டிலும், அதே முடிவுதான் திரும்பக் கிடைக்கிறது என்றால், அடிப்படையிலேயே தவறு இருப்பதாகத்தானே அர்த்தம்?
அதைக் கண்டறிந்து களையெடுக்காதது யார் குற்றம்?
போனமுறை போலில்லாமல், இம்முறை, நாக்அவுட் சுற்றை எட்டி விட்டோமே, இதுவே முன்னேற்றம்தானே என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அவைகூட, கோலி, சூர்யா போன்ற தனிப்பட்ட நபர்களால் வந்திருக்கிறதே ஒழிய, எந்தப் போர்க்கால நடவடிக்கைகளாலும் வந்துவிடவில்லை. கோலியின் அந்த சரித்திர சிக்ஸர் இல்லாவிட்டால், இந்தியா அடுத்த கட்டத்துக்குத் தாவியிருக்க முடியாமலேகூட போயிருக்கலாம்.