பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், மார்ச் மாதத் தொடக்கத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதற்காக அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாகவும் சமீபத்தில் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் செய்யும் உடற்பயிற்சியால் தான் தற்போது மாரடைப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும், பெண்கள் யாரும் தங்களுக்கு மாரடைப்பு வராது என அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில், உடற்பயிற்சி தொடர்பாக சுஷ்மிதா சென் சொன்ன அதே கருத்தை தற்போது அவரது இதய மருத்துவரும் முன் வைத்துள்ளார். இதயநல மருத்துவரும் சுஷ்மிதாவுக்கு சிகிச்சை அளித்தவருமான டாக்டர் ராஜிவ் பக்வத், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சுஷ்மிதாவின் அதீத உடல்செயல்பாட்டினால் தான் அவருக்குப் பாதிப்பு குறைவாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “காலப்போக்கில் இந்த சமூகத்தில் பெண்களின் வாழ்க்கைமுறை தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. அதிக மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவை இதயத்துக்கு மட்டுமல்ல பாதகமல்ல. அவற்றால் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிக்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு, ஆண்களுக்கு வருவதை போல இருப்பதில்லை.

சுறுசுறுப்பான வாழ்க்கை பழக்கங்கள் மூலம் எவ்வளவு பெரிய உடல்நலக் கோளாறு மற்றும் கவலைகளையும் எளிதில் முறியடிக்க முடியும். நடிகை சுஷ்மிதா சென் விஷயத்திலும் அவரது அதிக உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸ் ஆகியவற்றால்தான் சென்னுக்கு பாதிப்பு குறைவாக இருந்து அவர் எளிதில் அதிலிருந்து மீண்டுள்ளார்” என டாக்டர் ராஜிவ் கூறியுள்ளார்.