மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது சிரிப்பாலும், காந்த கண்களாலும் வைரலானார்.
பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வர படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகம்மது ஃபர்மான் என்பவரை காதலித்து வந்த மோனலிசா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பூவார் அருமனூர் நயினார் கோவிலில் நேற்று (மார்ச். 11) திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் வந்திருந்த மோனலிசா கேரளாவில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
இந்தத் திருமணத்தை பலரும் ‘லவ் ஜிகாத்’ என்று விமர்சித்து வரும் நிலையில் மோனலிசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
” நான் இந்து முறைப்படிதான் திருமணம் செய்து கொண்டேன். இது ‘லவ் ஜிகாத்’ கிடையாது. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எல்லா மதங்களையும் சமமாகவே கருதுகிறேன்.

இது தனது சுய விருப்பத்தின் பேரில் நடந்த திருமணம். கேரளா தங்களுக்குப் பாதுகாப்பான இடமாகத் தெரிந்ததால் இங்கு திருமணம் செய்துகொண்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.